இதன் விளைவாக, கடன் தொல்லையால் தற்கொலை. வேலை போனதால் தற்கொலை, வேலை பழுவால் தற்கொலை, உறவுகள் முறிவால் தற்கொலை இதைவிட தேர்வில் தோல்வியால் அல்லது குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததனால் என்று பள்ளிக்குழந்தைகள் தற்கொலைகள் என தோல்விகளால் துவண்டு விழும் சிறகுகளாய் ஒரு சமுதாயத்தை உருவாக்கிவிட்டோம். நாம் இந்த ஓட்டத்தினால் அடைந்த பயன் தான் என்ன என்று சிந்தித்தால், சொந்த வீடு, மகிழுந்து, வங்கியில் போதுமான பணம், பிள்ளைகள் நல்ல பள்ளிகளில் படிப்பு என்று வெற்றிப்பாதையில் பயணம் செய்யும் மகிழ்ச்சி கொடுத்தாலும், உண்மையில் இந்த வாழ்கை முறையை உற்று கவனித்தால் நாம் அடைந்திருப்பது வெற்றியல்ல, வெற்றியென்று நமக்கு நாமே ஆழ் மனதில் ஏற்படுத்திகொண்ட மாயை என்று தெரியும். இரவு பகல் பாராமல், கணவனும் மனைவியும் உழைத்து, பிள்ளைகளுடன் நேரம் செலவிடாமல், week endல் மட்டும் Mc Donald'sல் chicken burger வாங்கி கொடுத்தால் பிள்ளைகளுக்கு பாசமும் நேசமும் வந்துவிடுமா? சொந்த அண்ணன், தம்பி, தங்கை என்று எல்லாரையும் நம் ஓட்டத்திற்கு தடையாக நினைத்து, தூரத்தில் வைத்து விட்டோம். ஆனால் நம் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பாசத்துடனும் நேசத்துடனும் வளர்வார்கள் என்று நம்புகிறோம். நம் பெற்றோர்களை நம் அருகே வைத்து பேணிக் காக்க மறுக்கிறோம். ஆனால் நம் பிள்ளைகள் நம்மை மதிக்க வேண்டுமென்று நினைக்கிறோம். இந்த ஓட்டத்தின் முடிவில் என்ன நடக்கிறது? நாம் வாழ்க்கை முழுவதும் உழைத்து, பல இன்பங்களை இழந்து, பல துன்பங்களையும், அவமானங்களையும் தாங்கி, பல கனவுகண்டு, வளர்த்த பிள்ளைகள், வளர்ந்த பின் நாம் சேர்த்து வைத்த சொத்துக்காக அவர்கள்சண்டையிட்டு கொள்வதை நம் கண்முன்னே கண்டு வருந்தி சுருங்குகிறோம். ஆனால், அவர்களுக்கு நாம் தான் அப்படி ஒரு தவறான வாழ்கை முறையை கற்பிதிருக்கின்றோம் என்பதை உணர்வதில்லை
இந்த ஓட்டத்தினால், இந்த உலகத்தில் இருக்கும் பல அற்புதங்களை நாம் ரசிப்பதில்லை, நம் பிள்ளைகளையும் ரசிக்க விடுவதில்லை. தோல்வியென்பது நம் வாழ்கையின் அங்கம் என்பதையும், நம் பிள்ளைகளின் தோல்வி அவர்களின் வாழ்க்கை கல்வி என்றும் நாம் புரிந்துகொள்வதில்லை. வாழ்கை பயணத்தில், பாதையில் இருக்கும் முற்களை ஒதுக்கி மலர்ச்சோலையை சென்றடைவதற்கு பதில், கையில் கத்தியை கொடுத்து வனத்தில் போய் சண்டையிட அனுப்புகிறோம். அவர்கள் முள் எது, மலர் எது, விலங்குகள் எது, என்று தெரியாமல் தவறான அணுகுமுறையால் அரைகுறை வாழ்கை வாழ்கிறார்கள். தாம் வாழ்ந்ததற்கான சுவடுகளே இல்லாத அளவிற்கு ஒரு வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம்.
இப்படிதான் வாழ வேண்டுமென்று விதிகளேதும் இல்லை. எப்படி வாழவேண்டுமென்பது நம் கையில்தான் இருக்கிறது. இனி நம் பிள்ளைகளையாவது நல்ல முறையில் வாழ வழி விடுவோமா?, நல்ல வாழ்க்கை முறையை கற்பிப்போமா?
நன்றி
பாமரத் தமிழன்