Friday, November 21, 2008

முட்டாள் இளைஞர்களும் புத்திசாலி நடிகர்களும்.



ரசிகர்கள் என்ற பெயரில் சுற்றி திரியும் முட்டாள் இளைஞர்களை, நடிகர்கள் அவர்களின் சுய லாபத்துக்காக எப்படியெல்லாம் பயன் படுத்திக்கொள்கிறார்கள்.

இனி வருவது குமுதம் ரேபோர்டேரில் வெளிவந்த விஜயின் உண்ணாவிரதம் பற்றிய செய்தி!

உண்ணா விரதத்தின் மூலம் பாவ மன்னிப்பு கெட்ட விஜய் - குமுதம் ரிப்போர்ட்டர்

ஈழப் பிரச்னை இன்று தமிழகத்தில் பரபரப்பாக பற்றியெரியும் நிலையில், தனியொரு நடிகராக விஜய் இந்தப் பிரச்னையில் களமிறங்கி, அவரது ரசிகர்கள் சகிதம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிறன்று முப்பத்தாறு இடங்களில் விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதமிருந்தனர். இந்த உண்ணாவிரதங்களுக்கான ஏற்பாட்டைச் செய்தது, இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கம். சென்னை சேப்பாக்கத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் விஜய் கலந்து கொண்டார். அதேநாளில், அதே இடத்தில் உண்ணாவிரதம் நடத்த இருந்த இந்து மக்கள் கட்சி, விஜய்க்காக அந்த இடத்தை விட்டுக் கொடுத்தது தனிக்கதை.

காலை எட்டு மணிக்கு போராட்டம் என அறிவித்திருந்தாலும், விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அங்கே வந்து சேர்ந்தபோது மணி ஒன்பது. மேடை உள்பட மற்ற ஏற்பாடுகளைப் பார்வையிட்ட எஸ்.ஏ.சி.யிடம் நாம் பேச்சுக் கொடுத்தோம். ``இந்தப் போராட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. விஜயின் விருப்பத்தின் பேரில்தான் இது நடக்கிறது'' என்றார் அவர். அதன்பின் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், புதுவைப் பகுதி ரசிகர்கள் வந்து குவிய ஆரம்பித்தனர். புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. புஷி ஆனந்த், அந்த மாநில விஜய் ரசிகர் மன்றத் தலைவராம். அவரும் வந்திருந்தார்.

ரசிகர்கள் இருக்கைகளில் அமராமல் எழுந்து நின்று கத்திக்கொண்டே இருந்ததால், ``நீங்கள் திரைப்பட விழாவுக்கு வரவில்லை. நம் சகோதரர்கள் வீட்டு சாவுக்கு வந்திருக்கிறீர்கள். இப்படி நடந்து கொள்ளக் கூடாது'' என்று மைக்கில் எஸ்.ஏ.சி. திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் யாராவது கேட்டால்தானே? நடிகர் மன்சூர் அலிகான் அவரது மகளுடன் வந்து இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். ``நான் ஆவேசமாகப் பேச இந்த மேடை உகந்த இடம் இல்லை. மத்திய அரசு இலங்கைக்குச் செய்யும் ஆயுத உதவிகளை அங்குள்ள போராளிகளுக்குச் செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை'' என்று பேசினார் மன்சூர். (மன்சூர் தொடங்கி அதன்பின் ஒவ்வொருவரும் பேசும்போது எஸ்.ஏ.சி., அவர்கள் அருகிலேயே நின்று, `வில்லங்கமாக எதுவும் பேசி விடாதீர்கள்' என்று கெஞ்சினார்).

காலை 10.20-க்கு விஜயின் தாயாரும் பாடகியுமான ஷோபா சந்திரசேகர் வர, 10.25 மணிக்கு வந்து சேர்ந்தார் விஜய். அப்போது `நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்(!!)' என்ற பாடல் ஒலிபெருக்கியில் அலறியது. `திருச்செந்தூரில் `வில்லு' பட ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு விஜய் வந்திருப்பதாக' எஸ்.ஏ.சி. மைக்கில் சொன்னார். விஜய் வந்தபின் பேசத் தொடங்கிய ஷோபா, ``உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் சோகமும் சந்தோஷமாக மாறும் காலம் வந்துவிட்டது'' என்று முடித்துக் கொண்டார்.

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகப் பேச அரசியல் பிரமுகர்களோ, திரையுலகத்தினரோ வராததால் மேடை டல்லடித்தது. இதை ஈடுகட்டும் விதமாக `நீ எந்த ஊரு நான் எந்த ஊரு', `அர்ஜுனன் வில்லு, அரிச்சந்திரன் சொல்லு' போன்ற புகழ்பெற்ற விஜய் பாடல்கள் காதுகளைப் பதம் பார்த்தன. அந்தப் பாடல்களுக்கு ரசிகர்கள் எழுந்து நடனம் ஆடத் தொடங்க, உண்ணாவிரதப் பந்தலே குத்தாட்ட மேடையானது. அப்போது மேடைக்கு வந்த பேராசிரியர் சுப. வீரபாண்டியன், ``சினிமா பாடல்களுக்கு நீங்கள் இப்படி நடனம் ஆடுவதை ஊடகங்கள் ஒளிபரப்பினால் என்ன ஆகும்? நடிகர்களுக்கும் சமூகப் பொறுப்புண்டு'' என்று விழா ஏற்பாட்டாளர்கள் தலையில் குட்டு வைத்தார்.

இயக்குநர் வேலு. பிரபாகரன் பேசும்போது, ``விஜய் பொறுப்புணர்வுடன் படங்களைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும்'' என்று அட்வைஸ் வழங்கினார். சுப.வீ. சென்ற பிறகு மீண்டும் விஜய் பாடல்கள் காதைக் கிழிக்கத் தொடங்கின. ரசிகர்களும் பழையபடி எழுந்து குத்தாட்டம் போட, போலீஸார் லேசான தடியடி நடத்தி அவர்களைக் கட்டுப்படுத்தினர். மதியம் 1.37 மணிக்கு விஜயின் மனைவி சங்கீதா வந்து சேர்ந்தார்.

இயக்குநர் வி.சி.குகநாதன் பேசும்போது, ``இயக்குநர்கள் சீமானும், அமீரும் தனித்தனியாகச் சொன்னால் குற்றம்; விஜய் ரசிகர்கள் அனைவரும் இணைந்து சொன்னால் அதுதான் சட்டம். விஜய் கோட்டையைப் பிடிப்பது நிஜம்'' என்று எதற்கோ அச்சாரம் போட்டுவிட்டுச் சென்றார். நடிகர் ஸ்ரீமன், ``புத்தன் பிறந்த நாட்டில் நடக்கும் யுத்தத்தை நிறுத்த புத்தனே விஜய் வடிவில் மறு அவதாரம் எடுத்திருக்கிறார்'' என்று பேசி அசத்தினார்(!). இயக்குநர் பேரரசு, ``இதே இடத்தில் (ரஜினி கலந்து கொண்ட) ஒகேனக்கல் பிரச்னைக்காகக் கூடிய கூட்டத்தைவிட அதிகமான கூட்டம் கூடிவிட்டது'' என்று பஞ்ச் வைத்தார்.

பிற்பகல் 3.30 மணிக்கு பழ.நெடுமாறன் உண்ணாவிரத மேடைக்கு வந்த போது, மேடையில் `வா.. வா..வா என் தலைவா, உன் ரசிகன் நான் அல்லவா?' என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ரசிகர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து முகம் சுளித்தார் நெடுமாறன். சற்று நேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியனும் மேடையேறினார். அவர்கள் இருவரும் பேசிவிட்டுச் சென்றதும் பேசத் தொடங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர், ``தமிழகம் முழுவதும் இன்று 36 இடங்களில் விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். `சேலத்தில் ஆயிரம் சாப்பாட்டுப் பொட்டலம் வாங்கியிருந்தோம். ஆனால் இரண்டாயிரத்து ஐநூறு பேர் வந்துவிட்டார்கள்' என்று சேலம் மாவட்டத் தலைவர் என்னிடம் பேசினார்'' என அவர் சொன்னதும், மேடையில் இருந்தவர்கள் (விஜய் உள்பட) சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள். உடனே சுதாரித்துக் கொண்ட எஸ்.ஏ.சி. ``அந்தச் சாப்பாடு உண்ணாவிரதம் முடிந்ததும் வழங்குவதற்கு..'' என்று கூறி சமாளித்தார்.

கடைசியில் பேசிய விஜய், ``இலங்கையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. திரையுலகத்தினரும், அரசியல் கட்சிகளும் எத்தனையோ போராட்டங்களை நடத்திவிட்டார்கள். எனது கோரிக்கையை ஏற்று எனது ரசிகர்கள், `இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும்' என்று மத்திய அரசுக்குத் தந்தி அனுப்பினார்கள். அந்த வாசகத்தை சிங்கள மொழியில் சொன்னாலாவது அவர்கள் காதில் விழுகிறதா பார்ப்போம்?'' என்றவர், ``ஸ்ரீலங்க ராஜ்ஜிய கருணாகர ஹிதயவதன; ஜெமில மரணக்கே நவதாண்டவோனே!'' என்றவர், ``நிச்சயம் அங்கு நடக்கும் போர் முடிவுக்கு வரும்'' என்று முழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். பின்பு நாம் விஜயிடம் தனியாகப் பேசியபோதும் மேடையில் பேசிய அதே கருத்தைத்தான் நம்மிடமும் சொன்னார் அவர்.

திரையுலகத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, ``தனது மகன் விஜயை சினிமாவில் முன்னிறுத்த அவரது தந்தை எஸ்.ஏ.சி. என்னவெல்லாம் செய்தார் என்று எல்லோருக்கும் தெரியும். அடுத்தகட்டமாக விஜயை இப்போது அரசியலுக்கும் அவர் தயார் செய்து கொண்டிருக்கிறார். முதலில் மன்றக் கொடி வெளியிட்டார்கள். இப்போது உண்ணாவிரதம். இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண நிதியாக நயன்தாரா கூட ஐந்து லட்ச ரூபாய் கொடுக்க, விஜய் கொடுத்தது வெறும் ஒரு லட்சம்தான். அதனால் ஏற்பட்ட சலசலப்பைச் சரி செய்யவே இந்த உண்ணாவிரத ஏற்பாடு. அதாவது இந்த உண்ணாவிரதத்தின் மூலம் அனைவரிடமும் பாவ மன்னிப்புக் கேட்டிருக்கிறார். மற்றபடி ரசிகர்கள் கேட்டுக் கொண்டதால் உண்ணாவிரதம் நடத்துகிறோம் என்று சொல்வதெல்லாம் நம்பும்படியாக இல்லை'' என்றனர் அவர்கள்.

இவ்வாறாக முடிகிறது அந்த செய்தி.

நம் இளைஞர்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ள அப்துல் கலாம் போன்ற அறிஞர்கள் இதை பார்த்தால் அவர்களுக்கே நம் தேசம் மீதும் மக்கள் மீதும் உள்ள நம்பிக்கை போய் விடும்.

இது போன்ற ஒரு நடிகனின் பின்னால் பொய், கெட்டு சீரழிந்து, தன் குடும்பத்தை சீரழித்து, நம் நாட்டையே நாசமாக்கும் இவ்வாறான இளைஞர்களை என்ன செய்ய முடியும்? அல்லது இந்த நடிகர்களை தான் என்ன செய்ய முடியும்? இதையெல்லாம் நினைத்தால் வெக்க கேடாக இல்லை?

நன்றி,
பாமர தமிழன்.

Tuesday, November 11, 2008

2023? கடலில் மூழ்கும் சென்னை?

சுழன்றடித்த சுனாமிக்குப் பிறகு தமிழக தட்பவெப்ப நிலையில் நிறைய மாற்றங்கள். கோடையில் அதீத அனல், குளிர்காலத்தில் மழையும் குளிரும் இல்லாத இரண்டுங்கெட்டான் நிலை. இதன் தாக்கம் கடலிலும் எதிரொலிப்பதால் குமரி முதல் சென்னை வரை வரை பனை மர உயரத்துக்கு அலைகள் எழும்பி, ஆர்ப்பரிக்கின்றன. கடலை நம்பியே வாழும் மீனவர்கள், தமிழக மக்களின் மனதில் பயம்; பீதி. என்னவாயிற்று இயற்கைக்கு?

``காற்று மண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரிப்பதுதான் இதற்கு மூல காரணம். சுருக்கமாக `குளோபல் வார்மிங்'. இதனால் கடல் மட்டம் உயர்ந்து நீர் நிலத்திற்குள் வரும். குறிப்பா சென்னை நகரத்திற்கு இந்த ஆபத்து அதிகம்!'' என்று சொல்லி அதிர வைக்கிறார் பிரபல புவியியல் நிபுணரும், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தருமான டாக்டர் ராமச்சந்திரன்.

``உலகின் தென்துருவமான அண்டார்ட்டிகா முழுவதும் பனிமலைகளின் ஆதிக்கம். மனிதர்கள் உயிர்வாழ முடியாத அளவு ரத்தத்தை உறைய வைக்கும் வெப்ப நிலை. ஆனால் கடந்த பன்னிரண்டாயிரம் ஆண்டுகளாக ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிற பனிக்கட்டிகள் மெல்லமெல்ல உருக ஆரம்பிச்சிருக்கு. இதற்குக் காரணம் அங்கே 0.5 முதல் 1% வரை வெப்பநிலை உயர்ந்திருப்பதுதான். இதனால் கடல் நீர்மட்டம் 28 செ.மீ. உயரம் என்கிற அசாதாரண நிலையைத் தொட்டிருக்கு.

1980-க்குப் பிறகு ஆராய்ச்சிகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டிருக்கு'' என்று சொல்லும் ராமச்சந்திரன், ``இப்போதிருக்கும் உலக வெப்ப நிலையில் 2% உயர்ந்தாலே போதும், ஆபத்து நிச்சயம்'' என்கிறார்.

ஏற்ற இறக்கமான தட்பவெப்ப நிலைக்கு மற்றொரு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது `எல் நினோ'. தென்அமெரிக்க நாடான `பெரு'வில் பசிபிக் கடலுக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தில் உண்டாகும் மாற்றம்தான் `எல் நினோ'. உலகின் மேற்குப் பகுதியில் உயரமாக இருக்கும் இந்த நீரோட்டம், கிழக்குப் பக்கம் சற்று தாழ்வாக இருக்கும். அதன் காரணமாக கடல்நீர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்து இந்தியப் பெருங்கடலில் நீர்மட்டத்தை உயர்த்துகிறது.

சரி, பனிப்பாறைகள் உருகுவது இயல்புதானே. இயற்கை அதனை சமன் செய்து கொள்ளாதா?

``அப்படிச் சொல்ல முடியாது. உதாரணமா லார்சன் - ஏ. இவை அண்டார்ட்டிகாவில் இருக்கும் மிகப்பெரிய பனிப்பாறைகள். நான்காயிரம் ஆண்டுகள் பழமையானவை. பொதுவா மிக அதிக வெப்பம் தாக்கினாலன்றி பனிப்பாறைகள் எளிதில் உருகாது. ஆனால் தற்போது லார்சன்-ஏ பனிப்பாறைகள் உருகிக்கிட்டிருக்கு. இதனால் நீரின் அடர்த்தி, வெப்ப நிலை, காற்றின் வேகம்... உள்ளிட்டவற்றில் நிறைய மாற்றங்கள். இயற்கையின் போக்கையே இந்த மாற்றங்கள் புரட்டிப் போட்டுவிடும்'' என எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார் ராமச்சந்திரன்.

`பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்தாலும், தமிழகத்திற்கு ஆபத்து உண்டா?' - என்ன சொல்கிறார் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ராய்டு?

``இப்போ நாம மக்கிப் போன பொருட்களிலிருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசல், அனல் மின்சாரத்தைத்தான் எரிபொருட்களா பயன்படுத்துறோம். இதனால் காற்று மண்டலம் முழுவதும் கார்பன்_டை_ஆக்ஸைடின் அளவு எகிறுது. அதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலிப்பதில் ஆச்சரியமில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடல் பகுதியின் பரப்பளவு மிக நீ... ளம்.

குறிப்பா, கடலின் ஆழ்பகுதிக்கும் தரைப்பகுதிக்கும் இடையே உள்ள `மீன் ஸீ லெவல்' (எம்.எஸ்.எல்.) சென்னையில் மிகவும் குறைவு. உதாரணமா, ஊட்டியில் `எம்.எஸ்.எல்.'லின் அளவு மூவாயிரம் அடி. ஆனால் சென்னையில் `எம்.எஸ்.எல்.'லின் அளவு என்ன தெரியுமா? ஒரு அடிக்கும் குறைவு. சென்னையில் ராயபுரம் முதல் திருவான்மியூர் வரை இதுதான் நிலை. அதனால் இந்தியப் பெருங்கடலில் நீர்மட்டம் உயரும் போது சென்னைக்கு பாதிப்பு நிச்சயம்!' எனச் சொல்லும் ராய்டு, மரபுசாரா எரிசக்தியைப் பயன்படுத்துவதும், கடல்வாழ் தாவரங்களை வளர்ப்பதும் மட்டுமே இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி என்று `பாசிட்டிவ்'வாகப் பதில் சொல்கிறார்..

``லேட்டஸ்ட்டாக இமய மலையை ஆய்வு செய்து வரும் டெல்லியைச் சேர்ந்த புவி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று `குளோபல் வார்மிங்' காரணமாக இமயமலையில் இருக்கும் பனிப்பாறைகள் உருகி வருவதாகவும், இன்னும் 15 ஆண்டுகளில் பனிப்பாறைகள் முழுவதும் உருகி வெறும் கற்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் என்கிற அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கிறது. அதனால் இந்தியப் பெருங்கடலில் நீர் மட்டம் உயர்ந்து சென்னை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் கடலில் மூழ்கும் என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

-எஸ். அன்வர்
படங்கள் : சித்ரம் மத்தியாஸ்
Source: www.kumudam.com

நன்றி,
பாமர தமிழன்

Wednesday, November 5, 2008

64 லட்சம் கோடி இந்திய கருப்பு பணம் - குமுதம் கவர் ஸ்டோரி

இந்தியா 2020ல் வல்லரசு நாடாகிவிடும் என்றெல்லாம் கனவு கண்டிருக்கும் மக்களை பகீரென்று பதற வைக்கும் குமுதம் கவர் ஸ்டோரி உண்மையில் இந்தியா எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறதென்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது. இனி அந்த கனவே வேண்டாம் என்பது போல தோன்றுமளவிற்கு பாதித்திருக்கிறது இந்தச்செய்தி.

இனி வருவது குமுதம் கவர் ஸ்டோர்யிலிருந்து:

இந்தியாவில் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டதும், வரி ஏய்ப்பு செய்யப்பட்டு பதுக்கப்பட்டதுமான இந்திய கறுப்புப்பணம் உலக வங்கிகளில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 64 லட்சம் கோடி. இதயமே நின்றுவிடும்போல் இருக்கிறதா? மேலே படியுங்கள்.

உலகிலேயே கறுப்புப் பணத்திற்குப் பாதுகாப்பான இடம் `சுவிஸ் பேங்க்' என்றழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள்தான். அந்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் இந்த வங்கிகளின் சேவைகளைப் பொறுத்தே அமைந்துள்ளது. சுவிஸ்ஸில் உள்ள வங்கிகள் சுவிஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வராது. எனவே, அந்த அரசே நினைத்தாலும் வங்கிக் கணக்குப் பற்றிய எந்த விவரத்தையும் அறிந்து கொள்ள முடியாது. இதுதான் உலகில் உள்ள கறுப்புப் பண முதலைகள் அனைவரும் சுவிஸ் வங்கிகளில் தங்களின் பணத்தைப் பதுக்கி வைப்பதற்கான முக்கிய காரணம். இந்த ரகசிய காப்பு விவகாரங்களை 1934 ஆம் ஆண்டு முதலே ஒரு சட்டமாக்கி பாதுகாத்து வருகிறது சுவிஸ் அரசு.

மேலும், அந்த நாட்டின் சட்டப்படி அதிகப்படியான வருமானத்தை கணக்கில் காட்டாமலிருப்பதோ, சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை மறைப்பதோ ஒரு குற்றமே இல்லை. எனவேதான் உலக நாடுகளில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணம், வரிஏய்ப்பு செய்யப்பட்ட பணம் என எல்லாவிதமான கறுப்புப் பணமும் சுவிஸ் வங்கிகளில் குவிந்து வருகின்றது.

இந்த ஆண்டு கடந்த மே மாதம் புதுடெல்லியில் உள்ள இண்டியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் பைனான்ஸ் நிறுவனத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் சுமன் அகர்வால் ஒரு ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். அதன்படி உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கறுப்புப் பணமாக பதுக்கப்பட்டுள்ளது மட்டும் 2.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்தத் தொகை உலகப் பொருளாதாரத்தில் ஏழு சதவிகிதமாகும். அதில் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் பணம் இந்தியர்களுக்குச் சொந்தமானது. இந்தத் தொகையின் இந்திய மதிப்பு சுமார் 64 லட்சம் கோடி ரூபாய். இந்தியர்களுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யர்கள் 470 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், இங்கிலாந்து 390 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் கறுப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ளனர்.

``உலகிலேயே கறுப்புப் பண பதுக்கலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியர்கள்தான். இந்தியர்களின் கறுப்புப் பணமான 64 லட்சம் கோடி ரூபாய் என்பது ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தில் 48 சதவிகிதம் என்கின்றார் இந்திய பொருளாதார நிபுணர் அருண்குமார்.

இந்த 64 லட்சம் கோடி ரூபாய் என்பது உலக நாடுகளில் இந்தியா வாங்கியுள்ள கடன் தொகையைப் போல பதின்மூன்று மடங்கு அதிகம். அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த கடனே நாலரை லட்சம் கோடிக்கும் குறைவுதான். நாம் நமது பணத்தை கறுப்புப் பணமாக வங்கிகளில் பதுக்கி வைத்துவிட்டு, உலக நாடுகளிடம் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பணம் இந்திய அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா நடிகர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கிரிமினல்களுக்குச் சொந்தமானதாக கூறப்படுகிறது.

உலக அளவில் இது போன்ற கறுப்புப் பணம் பெரும்பாலும் சர்வதேச தீவிரவாதம், போதைப் பொருள் தயாரித்தல், கடத்தல், விற்பனை, சர்வதேச அளவில் விபசாரம், புளூபிலிம் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கடத்தல், சூதாட்டம் ஆகியவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக உலக நாடுகள் கருதுகின்றன. அதிலும் கறுப்புப்பணமே சர்வதேச தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தப்படுவதாக உலகநாடுகள் பலவும் அஞ்சுகின்றன.

எனவேதான் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போரின் விவரங்களை வெளியிடும்படி அமெரிக்கா, ஐ.நா. சபை உட்பட அனைத்து நாடுகளும் சுவிஸ் அரசை வலியுறுத்தி வந்தன. அதிலும் 09.11.2001-ல் அமெரிக்காவில் ட்வின் டவர் தீவிரவாதக் கும்பலால் உடைக்கப்பட்ட பிறகு இந்த நிர்ப்பந்தம் சுவிஸுக்கு அதிகமாகியது. அதுவரை இந்த வங்கிக் கணக்குகளின் ரகசிய பராமரிப்பைப் பாதுகாக்கவே ஐ.நா. சபையில் உறுப்பினராகாமல் இருந்த சுவிஸ் நாடு 2002-ல் வேறு வழியின்றி ஐ.நா. சபையில் உறுப்பினரானது. மேலும் சுவிஸ் அரசு அந்நாட்டு வங்கிகளுக்கு ஒரு சட்டமும் கொண்டு வந்தது. அதன்படி சுவிஸ் வங்கிகளில் பிரைவேட் அக்கவுண்ட் தொடங்குபவர்களின் விவரங்களை வங்கிகள் முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும். அதை அரசுக்கோ வேறு யாருக்குமோ தெரிவிக்க வேண்டியது இல்லை என்றாலும், தங்களின் வாடிக்கையாளர்களின் விவரங்களை வங்கிகள் அறிந்திருக்க வேண்டும் என அந்த சட்டம் கூறியது.

இது ஒரு புறமிருக்க, ஆஸ்திரேலியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் உள்ள சிறிய நாடு லீச்டென்ஸ்டீன். இந்நாட்டிலுள்ள எல்.டி.ஜி. வங்கியில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள எண்ணூறு வாடிக்கையாளர்களின் விவரங்களை ஜெர்மனியின் புலனாய்வுத்துறையான பி.என்.டி. அமைப்பு சேகரித்துவிட்டது. இதைத் தொடர்ந்து உலக நாடுகளான அமெரிக்கா, பின்லேண்ட், கனடா, நார்வே, சுவீடன், இத்தாலி, அயர்லாந்து, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் அந்த எல்.டி.ஜி. வங்கியில் கணக்கு வைத்துள்ள தங்களின் நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்களை வாங்கிவிட்டது. மேலும், அவர்கள் மூலம் அந்தப் பணத்தை மீண்டும் சொந்த நாட்டிற்கே எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதே நேரத்தில் இந்திய அரசு கேட்டுக் கொண்டால், எல்.டி.ஜி. வங்கியில் உள்ள இந்திய கறுப்புப் பண முதலீட்டாளர்களின் பெயர்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அளிக்கத்தயாராக இருப்பதாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தது. ஆனாலும் இந்திய அரசு இதுவரை அதைக் கண்டு கொள்ளவில்லை.

இது குறித்து `ட்ரான்ஃபரன்ஸி இன்டர்நேஷனல்' என்ற சர்வதேச அமைப்பின் இந்தியத் தலைவரும் முன்னாள் கடற்படைத்தலைவருமான அட்மிரல் தஹிலியானி, ``இந்தப் பணம் இந்திய மக்களுக்குச் சொந்தமானது. அதை வாங்கித் தர இந்தியா தயங்குவதும் மறுப்பதும் ஏன்?'' என்று கேட்டிருக்கிறார்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளருமான மோகனகிருஷ்ணன் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்க தயாராகி வருகிறார். ``பொதுமக்களிடம் நேர்மையானவர்களைப்போல் நாடகமாடும் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள், மக்களைச் சுரண்டி சேர்த்த பணம்தான் கறுப்புப் பணம். டெல்லியில் உள்ள உயர்மட்ட அரசியல்வாதிகள் தொடங்கி, தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் வி.ஐ.பி.கள் மற்றும் தொழிலதிபர்களின் போர்வையில் நடமாடுபவர்கள் சிலர் இந்தப் பட்டியலில் உள்ளனர். அந்தப் பட்டியலைத் தர ஜெர்மன் அரசு தயாராக இருந்தும், இந்திய அரசும் நிதித்துறையும் அது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றறிய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர ஏற்பாடுகள் செய்து வருகின்றார். நிச்சயம் அந்தப் பட்டியலை வெளியிட வைப்பேன்'' என்றார் நம்பிக்கையோடு..

-புஷ்கின்ராஜ்குமார்

சுவீஸ் வங்கியில் கணக்குத் துவங்குவது எப்படி?

சுவிஸ்வங்கியில் கணக்குத் துவங்க ஐந்தாயிரம் சுவிஸ் பிராஸஸ் பணம் கட்டி யார் வேண்டுமானாலும் சாதாரண கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைக்க முடியாது. இதற்கு பிரைவேட் அக்கவுண்ட் எனப்படும் ஸ்பெஷல் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும். இந்த பிரைவேட் அக்கவுண்ட் ஓபன் செய்ய முதல் டெபாசிட்டே இந்திய மதிப்பில் ஒன்றரைக் கோடி ரூபாயைக் கட்ட வேண்டும். இதற்கு நாம் சுவிஸ் நாட்டுக்குப் போக வேண்டுமென்பதில்லை. இமெயிலில் நமது விவரங்களை அனுப்பினாலே, அந்த வங்கியின் பிரைவேட் பேங்கர்ஸிலிருந்து ஒரு நபர் நீங்கள் குறிப்பிடும் இடத்திற்கே வந்து, அது சென்னையாக இருந்தாலும் வந்து உங்களின் பிரைவேட் அக்கவுண்டை தொடங்கி வைப்பார். பிரைவேட் அக்கவுண்ட் தொடங்கப்பட்டதும் ஒரு அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்படும். அதன்பிறகு எல்லாமே அந்த நம்பர்தான். அதுமட்டுமின்றி, இந்த பிரைவேட் வங்கியின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவெனில், வங்கிக் கணக்கைத் தொடங்கியவர் யாரை நாமினியாக குறிப்பிடுகிறாரோ அவரைத் தவிர வேறு யாரும் மனைவி, பிள்ளைகளாக இருந்தாலும் இந்தப் பணத்தை உரிமை கோர முடியாது.

இப்படி பிரைவேட் அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர் சுவிட்சர்லாந்து நாட்டின் தண்டனைச் சட்டப்படி அந்த நாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்தான், அந்நாட்டு அரசே அந்த நபரின் பிரைவேட் அக்கவுண்ட் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இப்படி பல்வேறு இறுக்கமான சிக்கல்கள் இருப்பதால்தான், இந்தியர்களின் இன்வெஸ்ட்மெண்ட் சுவிஸ் வங்கிகளில் குவிந்து கொண்டிருக்கிறது.


தமிழகத் தலைவர்கள் பெயரில் எவ்வளவு?

சுவிஸ் வங்கியில் பிரைவேட் அக்கவுண்ட்டில் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரங்கள் இப்போது லேசாக கசியத் தொடங்கியுள்ளன. அதில் டெல்லி முக்கியத்தலைவர்கள் சிலரின் பெயரும் அடக்கம். மும்பை பக்கம் பவர் பாலிடிக்ஸ் செய்பவரும் அதில் இடம் பெற்றிருக்கிறாராம்.

அதேபோல் தமிழகத்தில் முக்கிய தலைவர் ஒருவருக்கு நெருக்கமானவர்களின் உறவினர்கள் பெயரும் அதில் அடங்கியிருக்கிறது. தமிழகத்தின் வாரிசு தலைவர் ஒருவர் இப்போது டில்லியில் மணியடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் கணக்கில் முப்பத்தாறாயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. கேடி சகோதரர்களின் கணக்கிலும் கணக்கில்லாமல் பணம் கிடக்கிறதாம். அதேபோல் ஃபுரூட் லேங்க்வேஜ் பெயரில் இப்போது புதுக்கணக்கு துவங்கப்பட்டிருக்கிறதாம். அந்தக் கணக்கைத் துவங்கி வைத்து பூஜை போட்டது ராஜாதி ராஜாவாம். தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் கடைசியாக கணக்குத் துவங்கியுள்ளவர் இந்த ஃப்ரூட் லேங்க்வேஜ்தானாம்.

நன்றி பாமரதமிழன்

source: http://www.kumudam.com/