Tuesday, May 24, 2011

நம்பிக்கை பொங்கிவழியும் தமிழகம். நல்லாட்சி புரிவாரா ஜே?

நடந்து முடிந்த தேர்தல், ஊழல், குடும்ப ஆதிக்கம், மற்றும் நிர்வாக திறன் குறைபாடு போன்ற குறைகள் நிறைந்த ஆட்சிக்கு மக்களிடம் எவ்வளவு எதிர்ப்பு இருந்துவந்துள்ளது என்பதையே உணர்த்திற்று. நடந்து முடிந்ததை பேசி இனி எந்த பயனும் இல்லை, தவறு நடந்திருந்தால், தவறு செய்தவர்களுக்கு தண்டனையை, நீதி மன்றமோ அல்லது, இறைவனோ கொடுப்பரென்று நம்புவோமாக. இனி நடக்கவிருப்பது, அதாவது, மூன்றாவது முறையாக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்றிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சி எப்படி இருக்க போகிறது என்பதை பொருத்து தான், ஒவ்வொரு தமிழனின் தலையெழுத்தும் உள்ளது என்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நன்கு அறிவார்கள்.

அமர்க்களமான ஆரம்பம்:

ஜெயலலிதா அவர்களின் ஆரம்பம் அமர்க்களமாகவே இருக்கிறது. புதுமுகங்கள் , சாதாரண நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்களை அமைச்சர்களாக்கியது, அமைச்சர்களுக்கு வகுப்பு நடத்துவது, மதிப்பிற்குரிய முன்னால் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்களின் உதவியாளரின் ஆலோசனைகளை, அமைச்சர்களுக்கு வழங்கி அதை பின்பற்ற கூறுவது, ஆடம்பரமில்லாமல் அடக்கி வாசிக்க அறிவுறுத்தி இருப்பது, எல்லாவற்றுக்கும் மேலாக தான் வரும்போது மக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நிறுத்த கூடாது என்று காவல்துறைக்கு அறிவுறுத்தியது போன்ற அற்புத காரியங்களை செய்து மக்களின் முழு நம்பிக்கையை பெற்றுவிட்டார் ஜே என்றே கூறலாம். இத்தகைய செயல்கள், தமிழகத்தை நல்ல ஒரு முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்சென்று அதன்மூலம் ஆட்சியை தக்கவைப்பதை தவிர வேறு வழி இல்லை என்பதை தமிழக முதல்வர் உணர்ந்துள்ளார் என்பதையே காட்டுகிறது. இப்படியே தொடர்ந்தால், தமிழகம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகளுமென்பதில் சந்தேகமில்லை.

எல்லாமே +ve ஆக நடக்கும்பொழுது கடந்த கால -ve சம்பவங்களை மனதில் கொள்ளாமல் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.
இனிவரும் காலங்களில் தமிழகம் சிறந்து விளங்க ஊடகங்களின் ஒத்துழைப்பும், நடுநிலை மாறாத விமர்சனமும் கண்டிப்பாக இருக்கவேண்டுமென்பதே மக்களின் விருப்பம்.

நன்றி பாமர தமிழன்.